மதுரை திமுக – மல்லுக்கட்டும் அமைச்சர்கள்

211

தூத்துகுடி, திருச்சியைப்போலவே மதுரையிலும் இரண்டு அமைச்சர்கள்.

ஒரே மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தால் என்னென்ன பஞ்சாயத்துகள் பாலிடிக்ஸ் இருக்குமோ… அத்தனையும் மதுரையிலும் நடக்கிறது.

இதில் பெரிய வேடிக்கை ப்ளஸ் ஒற்றுமை என்ன தெரியுமா?

கடந்த அதிமுக ஆட்சியிலும் மதுரை மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தனர்.

வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமாருக்கும், கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூவுக்கும் ஏழாம்பொருத்தமாக இருந்தது.

ஏறக்குறைய அதேநிலை இப்போது திமுகவிலும் நீடிப்பதுதான் ஆச்சர்யம்.

நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியும் மதுரை மாவட்டத்து அமைச்சர்கள்.

பெரிய இடத்துப்பிள்ளையான பழனிவேல் தியாகராஜன் சாதாரணமாகவே யாரையும் மதிக்க மாட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. பாரம்பர்யமிக்க குடும்பத்தை சேர்ந்தவர், பழம்பெரும் திமுக காரர் பழனிவேல்ராஜனின் மகன். போதாக்குறைக்கு வெளிநாட்டில் படித்தவர். சங்கிகளுக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர்.

தன்னுடைய மனதில் பட்டதை பளிச்சென பேசக்கூடிய தைரியக்காரர். அதனால் மற்றவர்களின் மனம் புண்படுமே என்பது பற்றிஎல்லாம் கவலைப்படாதவர்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பக்குவமாக பேச வேண்டும் என்று கருத்து தெரிவித்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவனை, இரண்டுகிலோ எறாவுக்காக விலைபோகக்கூடியவர் என்று எகத்தாளமாக ட்விட்டரில் நக்கலடித்தவர்.

டி.கே.எஸ். இளங்ககோவனையே இப்படி பிரித்துமேய்ந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இயல்பே இதுதான்.

அப்படிப்பட்ட மனுஷன் கடந்த காலங்களில் மூர்த்தியையும் கண்டுகொண்டதில்லை. உரிய மரியாதையையும் கொடுத்ததில்லை.

அவரால் உதாசீனப்படுத்தப்பட்ட மூரத்திக்கு உதயநிதி ஸ்டாலின் தயவில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்றோ, அவர் தேர்தலில் வெற்றியடைவார் என்றோ, அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்றோ பழனிவேல் தியாகராஜன் நினைத்துப்பாரத்திருக்க மாட்டார்.

இந்த அதிசயங்கள் அடுத்தடுத்து நடந்தேறின. இன்றைக்கு பத்திரப்பதிவுத்துறையின் அமைச்சராக இருக்கிறார் மூர்த்தி.

தனக்கு சமமமான பதவியில் மூர்த்தி இருப்பதை சகித்துக்கொள்ள முடியவில்லையா? அல்லது பிறரை மதிக்காத சுபாவமா என்று தெரியவில்லை. பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் மூர்த்தியை மதிப்பதே இல்லையாம்.

அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்குக் கூட மூர்த்தி அழைக்கப்படுவதில்லை என்று வருத்தப்படுகிறார்கள் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர்கள்.

சில வாரங்களுக்கு முன் மதுரையில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்தது. அப்போதும் கூட பழனிவேல் தியாகராஜனும், மூர்த்தியும் சேர்ந்து செல்லவில்லை. இருவருமே தனித்தனியாகவே விசிட் அடித்தனர்.

இவர்களுடைய பாலிடிக்ஸில் மாட்டிக்கொண்டு முழி பிதுங்குவது மதுரை உடன்பிறப்புகள் மட்டுமல்ல, மதுரை மாவட்ட ஆட்சியரும்தான்.

பாலம் இடிந்ததை பார்வையிட பழனிவேல் தியாகராஜன் சென்றபோது ஒருதடவையும், மூர்த்தி சென்றபோது ஒருதடவையும் மதுரை மாவட்ட ஆட்சியர் இரண்டுமுறை செல்ல வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டார்.

காணொலி வடிவத்தில் காண…

https://www.youtube.com/watch?v=alAfD4jLW9k