ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் துவக்கம்

1

‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற லார்க் ஸ்டூடியோஸ், முன்னணி நடிகர் ஜீவா நடிப்பில் தனது அடுத்த  தயாரிப்பான ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை  பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற பூஜை விழாவில், படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக இணைந்துள்ளார். இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜீவா மீண்டும் மதுரை மண்ணின் மண்வாசனையோடு, வலுவான குடும்ப உணர்வுகளையும் மனித உறவுகளையும் மையமாகக் கொண்ட கதையில் நடிக்கிறார். விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா. வெங்கட், இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் ‘தகப்பன்’, அப்பா–மகன் உறவின் ஆழமான பாசம், குடும்ப உறவுகளின் வலிமை மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு உணர்வுபூர்வமான திரைப்படமாக உருவாகிறது. குடும்ப ரசிகர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கே. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஒளிப்பதிவை எம். சுகுமார், படத்தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன், கலை இயக்கத்தை கே.பி. நந்தபாலன், சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை எம். செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ் ஆகியோர் மேற்கொள்கின்றனர். ஒலிப்பதிவை டி. உதய் குமார், ஸ்டில்ஸ் புகைப்படங்களை அன்பு கவனிக்கிறார்.

நிர்வாகத் தயாரிப்பாளராக ஆர். பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் கைப்பற்றியுள்ளது.

நடைபெற்ற பூஜை விழாவுடன் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

வலுவான கதை, திறமையான நடிகர் பட்டாளம், அனுபவம் மிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தரமான தயாரிப்பு ஆகியவற்றின் சங்கமமாக உருவாகும் ‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாகவும், தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க குடும்ப உணர்வுப் படைப்பாகவும் அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.