ஆறு மொழிகளில் உருவாகும் ‘மட்டி’ படம் டிசம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ்

54

இந்தியாவில் முதன்முதலில் பிரமாண்ட அளவில் ஆறு மொழிப் படமாக உருவாகியிருக்கிறது ‘மட்டி ‘ (Muddy) திரைப்படம்.
இந்தியாவின் முதன்முதலாக கரடுமுரடான மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் டாக்டர் பிரகபல் இயக்கி உள்ளார்.  பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் இப்படத்தைத்  தயாரித்துள்ளது.குடும்பம், பகை,  பழிவாங்கல் ,ஆக்ஷன் திகில் என்று பல  வண்ணங்களில் இப்படக்கதை சுற்றிச் சுழலும்.
‘கே ஜி.எப் ‘ போன்று  இப்படம் ஒரு முழு மேக்கிங் ஸ்டைல் விசையுடனான  விறுவிறுப்பைப் பார்ப்பவர்களிடம் உணரவைக்கும்.
‘கே ஜி.எப் ‘ படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 ‘ராட்சசன்’ படப்புகழ் சான் லோகேஷ்  எடிட்டிங் செய்திருக்கிறார். ‘புலி முருகன் ‘ புகழ்  ஆர்.பி.பாலா  இப் படத்திற்குத் தமிழில்
வசனம் எழுதி இருக்கிறார்.
யுவன் கிருஷ்ணா, ரிதன் , அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர பல படங்களில் அறிமுகமான முகங்களும் இப் படத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி,  ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகி இருக்கிறது .அந்தந்த மொழிகளுக்கும் தனித்தனியானதாக உருவாகி இருக்கிறது.
ஒவ்வொரு மொழிக்குமான பிரத்தியேகமான கலாச்சார பண்பாட்டுத் தன்மையோடு இப்படம் உருவாகியிருக்கிறது.
சினிமா மீது தாகமும் மோகமும் கொண்ட புதிய இளைஞர்களின் கூட்டணியில் ஐந்தாண்டு கால திட்டமிட்ட உழைப்பால் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதில் வரும் ஜீப் பந்தயப் படப்பிடிப்புக்காக இரண்டு ஆண்டு காலம் திட்டமிட்டுப் பயிற்சி எடுத்துக்கொண்டு ஒத்திகை பார்த்து உருவாக்கி இருக்கிறார்கள். இதில் வரும் ஜீப் ரேஸ் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். டூப்புகள் எதுவும் கையாளாமல் அந்தக் காட்சிகள் உருவாகியிருக்கின்றன.
அதனால்தான் இந்தப் படத்தின் தகுதியறிந்து அந்தந்த மொழிகளில் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டிரைலர்களை  வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்கள். தமிழில் விஜய் சேதுபதி, ஜெயம்ரவி ,தெலுங்கில் அனில் ரவி புடி, கன்னடத்தில் டாக்டர் சிவராஜ்குமார், இந்தியில் பாலிவுட் நட்சத்திரம் அர்ஜுன் கபூர்,மலையாளத்தில் பகத் பாசில், உன்னி முகுந்தன், அபர்ணா பாலமுரளி , ஆசிப் அலி ,சிஜுவில்சன் என்று திரைப் பிரபலங்கள்  தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு ஆதரவுக் கரம் கொடுத்துப் படத்தை மேலே கொண்டு சென்றுள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் டாக்டர் பிரகபல்…
“இந்தப் படம் திரையரங்கில் வெளியானால்தான் அதன் முழு ரசிப்புஅனுபவத்தையும் தர முடியும். அந்த அளவிற்கு இதில் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமைந்துள்ளன.இதில் வரும் சாகச காட்சிகளை திரையரங்கில் ரசித்தால் தான் அதன் முழு விளைவையும் உணர முடியும்.
இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு நல்ல விலை கேட்டு வந்தும் பிகே 7 கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணதாஸ் தருவதற்கு மறுத்து விட்டார் .
ஏன் என்றால் இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்த்தால் தான் உண்மையான திகிலான வீரியமான காட்சிகளின் அனுபவத்தினை உணர்ந்து ரசிக்க முடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எனவே அவர் ஓடிடியில் வெளியிடக் கொடுக்க மறுத்துவிட்டார்.
இந்தப்படத்தின் டிரைலர்கள் , மோஷன் போஸ்டர்கள் போன்றவை பெரிய அளவில் வெற்றி பெற்றன. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வெளியிட்டு உள்ளார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”என்கிறார்.
பல படங்களில் இடம் பெறாத  கதை நிகழ்விடங்கள் படத்தில் வருகின்றன.வாகனங்கள் செல்லாத பல இடங்களில் இதன் படப்பிடிப்பு சிரமப்பட்டு நடந்திருக்கிறது.
அதற்காகப் பெரிய அளவில் திட்டமும் பயிற்சியும்  செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் டிரைலர் மில்லியன் கணக்கில் ஹிட்டடித்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உயர்த்தி வைத்துள்ளது.
“ஒரு பரபரப்பான சாகசம் நிறைந்த திகிலான ஆக்சன் திரில்லர் அனுபவத்துக்குத் தயாராக இருங்கள்” என்று படக்குழு உத்தரவாதம் அளிக்கிறது.
சினிமா தாகம் உள்ள இளைஞர்களின் திறமைகள் இணைந்து இப்படத்தை முழு வீச்சோடு உருவாகியிருக்கிறது .இப்படம் டிசம்பர் 10 முதல்  ஒரே நேரத்தில் 6 மொழிகளில் பேன்  இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.