நட்டி – ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் ‘வெப்’

121

வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் படம் ‘வெப்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கியுள்ளார்.

நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார்.

4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் ‘காளி’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களில் கதாநாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை கதாநாயகியாக நடிக்கிறார்.

‘எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ படத்தின் கதாநாயகி ஷாஸ்வி பாலா, ‘முந்திரி காடு’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ படங்களில் நடித்த சுபப்ரியா மலர் மற்றும் விஜே அனன்யா மணி ஆகியோர் மற்ற 3 கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், முரளி, தீப்ஸிகா, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். காட்பாதர், மோகன்தாஸ் ஆகிய படங்களில் பணியாற்றிய அருண் சங்கர் கலை இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.

3 பாடல்கள் உள்ள இப்படத்தில் சாண்டி மாஸ்டர், சிவசங்கர் மாஸ்டர் மற்றும் ஹரிஷ் கார்த்திக் ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். அருண் பாரதி, ஆர்ஜெ விஜய் மற்றும் ஜெகன் கவிராஜ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டு வெளியேற துடிக்கும் பூச்சிகளின் போராட்டத்தை போன்று இந்த கதை உருவாகி உள்ளதால் அதற்கு பொருத்தமாக ‘வெப்’ என டைட்டில் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் நட்டிக்கும் ஷில்பா மஞ்சுநாத் குரூப்புக்கும் நடக்கும் பூனை எலி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் ஐடி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக உருவெடுத்த பார், பப் கலாச்சாரத்தை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹாரூன்.

கோவா உள்ளிட்ட பகுதிகளில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்த முதலில் திட்டமிடப்பட்டு இருந்தாலும் கொரோனா பரவல் காரணமாக, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.